இந்த வார கலாரசிகன்
By dn
First Published : 09 June 2013 01:16 AM IST
காலம்
ஏன் சிலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சில சம்பவங்களையும்,
நிகழ்வுகளையும், நடத்திக் காட்டுகிறது என்பது விளக்க முடியாத புதிர்.
ஒருவேளை நான் "தினமணி' நாளிதழுக்கு வராமலே இருந்திருந்தால், நான் வாழ்ந்த
காலத்தில் வாழ்ந்த பல தமிழ் வளர்த்த சான்றோரைச் சந்திக்க வாய்ப்பு
ஏற்படாமலே போயிருக்கும்.
கம்பன்
பெயர் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து
மறைந்தவர் திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார். திருப்பத்தூர் கம்பன்
கழகத்தைக் கட்டிக் காத்தவர் மட்டுமல்ல, கம்பனில் தோய்ந்த எத்தனை எத்தனையோ
அறிஞர்களை அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டப் பகுதியினருக்கு
அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
திருப்பத்தூர்
மாரிமுத்துச் செட்டியார் என்றால் உடனே நினைவுக்கு வருவது இரண்டுதான்.
முதலாவது, அவர் நம்மிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஏதோ உடன்பிறந்தவர்போல
அவர் சகஜமாகப் பழகும் பாங்கு, யாராக இருந்தாலும் அவரை நேசிக்க
வைத்துவிடும். இரண்டாவதாக, அவரது விருந்தோம்பல். என்னைப் போல, அவரது
வீட்டிற்குப் போய் அந்த விருந்தோம்பலை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
அதன் சுகம். திகட்டடித்து விடுவார்.
தான்
தில்லிக்குப் போனது, பண்டித ஜவஹர்லால் நேருவை தீன்மூர்த்தி பவனத்தில்
சந்தித்தது, அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசியது போன்றவற்றை மாரிமுத்துச்
செட்டியாரே சொல்லிக் கேட்க வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் அவருக்கும்
சலிக்காது. எத்தனை தடவை கேட்டாலும் நமக்கும் புளிக்காது. அத்தனை
சுவாரஸ்யமாகச் சொல்வார்.
தமிழக
அரசு கம்பன் விருது அறிவித்தபோது திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார்,
கோவை நஞ்சுண்டன், ராஜபாளையம் முத்துக்கிருஷ்ண ராசா, மதுரை சங்கர
சீத்தாராமன், காரைக்குடி பழ. பழனியப்பன்
முதலிய மூத்த கம்பன் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் அந்த விருது வழங்கப்பட
வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கம்பன் புகழ் பரப்பும் பேச்சாளர்களைக்
கௌரவிப்பது எத்தனை முக்கியமோ, அதைவிட அந்தப் பேச்சாளர்களுக்கு மேடை
அமைத்துக் கொடுத்து, சாமானியத் தமிழனும் கம்பன் கவியமுதைப் பருக வழிகோலும்
கம்பன் கழகத்தவர்களை விருது கொடுத்து கெüரவிப்பது அதைவிட அவசியம்.
திருப்பத்தூர்
மாரிமுத்துச் செட்டியார் சனிக்கிழமை காலை 11 மணிக்குக் காலமாகி விட்டார்
என்கிற செய்தி கேட்டதுமுதல், எதையோ இழந்துவிட்டதுபோல இதயம் கனக்கிறது.
கம்பன் கழகப் பணிகள் தொடர்வதும், தொடர்ந்து சிறப்பாக ஆண்டுதோறும்
திருப்பத்தூரில் கம்பன் விழா நடைபெறுவதும்தான் மாரிமுத்துச் செட்டியாருக்கு
செய்யும் நிஜமான அஞ்சலியாக இருக்க முடியும்!